கள்ளக்குறிச்சி, ஜூலை 18-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வருவாய் வட்டத்தை சீரமைத்து புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாணாபுரம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் வட்டம் சிறுபனையூர், கள்ளிப்பாடி, லா.கூடலூர், அலியாபாத், பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி மற்றும் பல கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளான வாரிசு சான்று, பட்டா மாற்றம், சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறு வதற்கு, தற்போதைய சங்கராபுரம் வட்டத்தின் தலைமை யிடம் சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதால் வந்துசெல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு அக்கிராம மக்கள் ஒருநாள் முழுவதையும் முழுமையாக செலவழிக்கப்பட வேண்டியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து கட்டணமும், இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி மாறி பயணம் செய்தும் வட்ட தலைமை அலுவலகமான சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது.
சங்கராபுரம் வட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அதாவது புதிய வட்டமாக உத்தேசிக்கப்பட்டுள்ள வாணா புரம் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்கள் பொருளா தாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வி அறிவிலும், இயற்கை வளத்திலும் போக்குவரத்து வசதியிலும் மிகவும் பின்தங்கி உள்ளன எனவும், எனவே வெகுதொலைவில் உள்ள கிராமங்களைப் பிரிப்பதன் மூலம் அம்மக்களுக்கு கால விரையம் மற்றும் பண விரையத்தை குறைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் விரைந்து பெற்றிட வசதியாக வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து வாணாபுரம் வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.