காஞ்சிபுரம்,அக்.9- வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பை ஒரு அடி குறைத்து 21 அடிக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் வைத்திருந்தால் பருவமழை தீவிரம் அடையும்போது உடனடியாக உபரி நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஏரியில் நீர் இருப்பை 21 அடியாக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏரியில் இருந்து தொடர்ந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் என்றும் பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது.