காத்திருப்போர் பட்டியலில் ஆய்வாளர்கள்
சென்னை,நவ.22- சென்னையில் 15 காவல் ஆய்வாளர்களை காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டுள்ளார். கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளார். ஏற்கெனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டிய லுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
சிபிஎம் போராட்ட எதிரொலி குரோம்பேட்டை சிக்னல் தடுப்புகளை அகற்ற காவல்துறை அதிகாரிகள் உறுதி
சென்னை, நவ. 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பையடுத்து, குரோம் பேட்டை சிக்னலில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தடையின்றி வாகனங்கள் சென்று வர காவல்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் குரோம்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்ப தடை விதித்து தடுப்புகள் வைக்கப்பட்டது. வாகனங்கள் நேராக சென்று எம்ஐடி பாலத்தின் மீது ஏறி சுற்றி வர வேண்டும். குரோம்பேட்டை சிக்னலில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதால், நியூ காலனியில் இருந்து வரும் வாகனங்கள் நாகல்கேணி பாலத்தின் மீது சென்று (சுமார் 2 கி.மீ.) சுற்றி வந்து தாம்பரம் செல்ல வேண்டும். இதனால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்தவும் கோரி புதனன்று (நவ.22) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 28வது வார்டு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதனையடுத்து, சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, 28வது வார்டு கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி, வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ஜீவா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், ஓரிரு தினங்களில் சிக்னலில் உள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
லாரி மோதி இளைஞர் பலி
செங்கல்பட்டு, நவ.22- செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சிலப்பதிகாரம் தெருவை சேர்ந்த ராமலிங்கம்(33). இவர் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் எலக்ட்ரீஷனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் புதனன்று ( நவ.22) வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் உறவினர் ஐயப்பன் என்பவருடன் தாம்பரம் நோக்கி வேலைக்கு சென்றுள்ளார். காட்டாங்குளத்தூர் சிக்னலில் சென்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க நின்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி ராமலிங்கம் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த ஐயப்பன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த ராமலிங்கம் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
140 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது
காஞ்சிபுரம்,நவ.22- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 909 ஏரிகளில் 140 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 161 ஏரிகள் 75 விழுக்காடும், 221 ஏரிகள் 50 விழுக்காடும், 297 ஏரிகள் 25 விழுக்காடும் நிரம்பி உள்ளன. இதேபோல் செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களில் செல்லக்கூடிய பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.
மீனவர் படகு கவிழ்ந்து பலி
கூவத்தூர், நவ.22- செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு இவரது மகன் நரேந்திரன் (வயது 23) அதிகாலை தனது படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர் கடல் மேல் மட்டத்தில் காற்று அதிகமாக வீசியதால் கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் படகை நிலை நிறுத்த முடியாமலும் கரைக்கும் வர முடி யாமலும் தத்தளித்த இளைஞர் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததால் படகுக்கு அடியில் இன்ஜின் பகுதி யில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் 22 விமானங்கள் தாமதம்
சென்னை,நவ.22- தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உட்பட 22 விமானங்கள் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடலூரில் கரை ஒதுங்கிய டால்பின்
கடலூர், நவ.22- கடலூர் ராசா பேட்டை கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடலூர் அருகே உள்ள ராசா பேட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.21) இரவு கடற்கரை ஓரத்தில் டால்பின் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அதன் மீது பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலைகள் இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக அந்த டால்பினை மீட்டு அதன் மீது இருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலையை நீக்கி மீண்டும் அதை தூக்கிக் கொண்டு கடலில் நீந்தி சென்று நடுக்கடலில் கொண்டு விட்டு வந்தனர். பின்பு நீண்ட நேரம் கரையில் நின்று பார்த்தும் டால்பின் வரவில்லை. இதையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் புதன்கிழமை (நவ.22) காலை அந்த டால்பின் மீன் ராசாப்பேட்டை கடற்கரை ஓரத்தில் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.
கல்விக் கடன் முகாம்: அமைச்சர் பங்கேற்பு
விழுப்புரம்,நவ.22- விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (நவ.22) நடைபெற்றது. அமைச்சர் க.பொன்முடி துவக்கி வைத்தார். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் கல்வி கடன் உதவி வழங்கப்பட்டது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதி ஜெய் நாராயணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, இரா.இலட்சுமணன், ச.சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் சிவ.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, நவ. 22- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3 ஆவது அலகு விரிவாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மேல்மா, தேத்துறை, வீரம்பாக்கம் வட ஆணாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் குரும்பூர், காட்டு குடிசை, நெடுங்கல், மற்றும் நர்மாபள்ளம் உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. இந்த நிலங்கள் தரிசு என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மணிலா, பூ வகைகள் சாகுபடி செய்து வருவதாக விவசாயிகள் கூறு கின்றனர். மாநில அரசால் கையகப்படுத்தப் படும் நிலங்கள் வேளாண் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலம் என்று தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள், மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 2 முதல் 120 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி அனக்காவூர் ஒன்றி யம் மேல்மா மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராம விவசாயிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைத்துள்ளனர். பல்வேறு சிறைகளில் அடைத்து உள்ள அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் டி. கே.வெங்கடேசன் தலைமையில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சங்கத்தின் மாநில துணைத் தலை வர் டி. ரவீந்திரன் கண்டன உரையாற்றி னார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். பலராமன், பொருளாளர் உதய குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பி னர் ப.செல்வன், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க பொதுச் செய லாளர் இரா. சரவணன், மாவட்டச் செய லாளர் எம். மாரிமுத்து, சிபிஎம் தாலுகா செயலாளர் டி. வெங்கடேசன், சிஐடியு நிர்வாகி வெ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.