5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் கோப்பை என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் (அடிலெய்டு) ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி (பிரிஸ்பேன்) டிராவில் நிறைவடைந்தது. இந்நிலையில், 4ஆவது டெஸ்ட் போட்டி “பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள்)” என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பார்டர் - கவாஸ்கர் தொடரை கைப்பற்றும் வாய்ப்புக்கு சாதகமான சூழல் ஏற்படும். அதனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகின்றன. அதனால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல், பண்ட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் நல்ல பேட்டிங் அனுபவம் கொண்டிருப்பதால், ரன்வேட்டை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.