districts

img

தவறான முகவரி: 4 இலவச வீடு ஆணை ரத்து

விழுப்புரம், மே 13- வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார், அப்போது 4 இலவச வீடு கட்டும் ஆணையை ஆட்சியர் ரத்து செய்ய உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட பொன்னம்பூண்டி ஊராட்சியில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு கடந்த ஆண்டு 43 பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது, இதனை நேரில் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார், ஆய்வில் 10 பயனாளிகள் 70 விழுக்காட்டினர் மேலும், 29 பயனாளிகள் 40 சதவீதத்திற்கு மேலும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது 4 பேர் வெளியூரில் வசித்து வரும் நிலையில் தவறான முகவரியை தந்து வீடு கட்டுவதற்கான ஆணை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். கோரக்கேணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகள், பெரும்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், வானூர் வட்டாட்சியர் பிரபுசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் உடனிருந்தனர்.