districts

img

ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல்

சென்னை, ஜூலை 15-

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்குட்பட்ட கார்னிஷ் நகர் பகுதியில் மாநகராட்சி நடு நிலைப் பள்ளி உள்ளது.

   இங்கு எல்.கே.ஜி. முதல் 8ஆம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் சேதம் அடைந்ததால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன.

   அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா அந்தப் பள்ளியை ஆய்வு செய்து, உடனடியாக சீர மைத்து கொடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் வலியுறுத்தினார். பள்ளியை சீரமைப்ப தற்காக 15 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை.

    புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளிடமும், மாமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் தற்போது 2.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைகள் கட்டும் பணிக்கு சனிக்கிழமை (ஜூலை 15) அடிக்கல் நாட்டப் பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், 4ஆவது மண்டலக் குழு தலைவர் நேதாஜி உ.கணேசன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், வட்டச் செயலாளர் கி.தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் திருமுருகன், ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.