கிருஷ்ணகிரி,அக்.26- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளது. இவற்றில் முதல் கட்டமாக 27 வார்டுகளில் முழுமையாகவும் 12 வார்டுகளில் பாதியாகவும் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த முதல் கட்ட திட்டத்துக்கு ரூ. 574.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு ரூ. 170.56 கோடியும், மாநில அரசு 155.06 கோடியும் வழங்குகின்றன. மீதமுள்ள 249.34 கோடி ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சொந்த நிதியாகும். தற்போது, மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை உள்ளதால் ஜெர்மன் வங்கியில் கடன் பெற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கு விளக்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டம் நடைபெற்றது. மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்தார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு குடிநீர் வழிகால் வாரிய செயற்பொறியாளர் பாபு தனசந்திரன், கிருஷ்ணகிரி செயற்பொறியாளர் லோக நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். எந்தெந்த வார்டுகளில் பணிகள் எப்படி மேற்கொள்வது என்பது குறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் ஊழியர்களுடன் இணைந்து தகவல் சேகரிக்கப்படும் என கூறினார். முதல் கட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் 325.125 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள்,30 மீட்டர் தூரத்திற்கு ஒரு சேம்பர்,37 லிப்டிங் ஸ்டேஷன், 11 பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு பாதாள சாக்கடை செல்லும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை பொறுத்து 6 மீட்டர் தூரத்திற்கு செப்டிக் டேங்க் உள்ள 600 சதுர அடி உள்ள வீடுகளுக்கு ரூ. 7200 எனவும் அதற்கு மேல் நீளம் வீட்டில் பரப்பை பொறுத்து ரூ.10,000 வரையும் டெபாசிட் செலுத்த வேண்டி வரும் என்றும் அலுவலர்கள் குறிப்பிட்டனர். பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல குழு தலைவர் ரவி, நகரமைப்பு தலைவர் அசோகா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்ட பணிகள் மார்ச் மாதத்துக்குள் வரையறுக்கப்பட்டு தொடங்கப்பட உள்ளதாகவும் அது குறித்த இன்னும் சில கூட்டங்களுக்கு பிறகு சரியான புள்ளி விவரங்கள் வரையறைகள் தயாரித்து வழங்கப்படும் என்று கூறினார்.