கிருஷ்ணகிரி,ஜன.25- ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் மூன்று நிறுவனங்களிலும் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர தொழி லாளர்களின் பணிகளை செய்து வருவதால் அதிகமாக லாபம் ஈட்டி வருகிறது. 10 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதாக உறுதி கூறிய அசோக் லேலண்ட் நிர்வாகம் 250 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசிடமிருந்து பெற்றது. ஆனால், 2 மற்றும் 3 வது யூனிட் தொழிற் சாலைகளில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 500 க்கும் குறைவாக உள்ளது. சுமார் 1,100 நிரந்தர தொழிலாளர்கள் முதல் யூனிட்டில் இருந்து 2 வது யூனிட்டுக்கு மாற்றப்பட்டனர். சுமார் 4,500 ஒப்பந்த தொழிலாளர்களும் 1600 நிரந்தர தொழிலாளர்களும் 600 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிபுரிந்து வரும் இங்கு நிரந்தரமான வேலைகளில் நிரந்தர தொழி லாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஒப்பந்த முறையை ஒழித்து நிரந்தர தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும். தொழிலாளர்களின் வாரிசுகள் பணியமர்த்த வேண்டும், பிடிசி முறையில் வாரிசுகளை, நிரந்தர பணியாளர்களாக எடுக்க வேண்டும், நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு வாழ்வ தற்கான அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி யூனிட் 2 வாயில் முன்பு தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு நாள் அடையாள உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். சங்கத்தின் செயலாளர் சக்திவேல் பொருளாளர் குமார் தலைமையில் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அசோக் லேலண்ட் 2 சிஐடியு அணி செயலாளர் தரணியன், தலைவர் பாட்ஷா, பொருளாளர் கார்த்தி, பிற அணிகள் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் பி.ஜி மூர்த்தி ஆகியோர் பேசினர்.