கிருஷ்ணகிரி,செப்.26- தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், மா, பூக்கள், பழங்கள் ஆகியவற்றை குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தி வைப்பதற்கு,உரிய நேரத்தில் விற்பனை செய்து லாபம் அடைவதற்கான நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர் 3300 பயனாளிகளுக்கு ரூ. 41.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.