கடலூர், பிப்.19- மனைவியை ஆணவக் கொலை செய்த வழக்கில் கணவர், மாமியார் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம், மேல் புவனகிரியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் கடந்த 8.7.2014 அன்று புவனகிரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் பெருமாத்தூர் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் தனது மகள் சீதாவை காணவில்லை என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சீதாவுக்கும் சிதம்பரத்தை சேர்ந்த அரச கிருஷ்ணன் மகன் சரவணன் (36) என்பவருக்கும் பதிவு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 15.7.2014 அன்று சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கடந்த 16.7.2014 அன்று தானும் தன் மைத்துனர் சரவணன், மாமியார் செல்வி, மனைவி சகுந்தலா ஆகியோர் சீதாவை கொலை செய்து பிணத்தை எரித்து விட்டதாக கூறினார். கடந்த 17.6.2014ம் தேதி சீதா வீட்டினுள் படுத்திருந்த போது, கட்டையால் சீதாவின் தலையில் அடித்ததில் அவர் இறந்துவிட்டதாகவும் பின்னர் டீசல் வாங்கி வந்து சீதாவின் பிணத்தை எரித்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரவணன் உள்ளிட்டோர் மீது கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சீதாவின் தந்தை பஞ்சநாதன், தாய் காந்திமதி ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில் தங்களது மகள் சீதா ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சரவணனும், அவரது தாயார் செல்வி, அவரது அக்கா சகுந்தலாவும், மாமா வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து ஆணவப் படுகொலை செய்துள்ளனர் என்றார். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நீதிபதி உத்தமராஜ் திங்கள்கிழமை தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சரவணன், வெங்கடேசன், செல்வி, சகுந்தலா, ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட தால், நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் சரவணன், வெங்கடேசன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், செல்வி, சகுந்தலா ஆகியோருக்கு தலா ரூ. 20,000 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜராகி வாதாடினார்.
சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் நடந்த புலன் விசாரணை
இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில் தொடர்ச்சி யான சம்பவங்களை, தக்க சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், புலன்விசாரணை மேற்கொண்டு, குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தவர், தற்போது கடலூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும் ராஜாராம் என்பது குறிப்பிடத்தக்கது.