திருத்தணி, நவ.8- மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான தோழர் ஜி.மணிகண்டன் (39), புதனன்று (நவ 8), காலமானார். திருத்தணி, செருக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜி.மணிகண்டன் திருத்தணி வட்டாரத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா, குடிநீர், இனச் சான்றிதழ் பெற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். தொடர் போராட்டத்தின் விளைவாக அம்மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்தவர். திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் வசிக்கும் இருளர் இன மக்களுக்காகவும் போராடியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு போராட்டங் களில் பங்கேற்று சிறை சென்றவர் மணிகண்டன். இவர் புதனன்று (நவ 8), காலை மாரடைப்பால் காலமானார்.அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், சி.பெருமாள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, கட்சியின் வட்டச் செயலாளர் வி.அந்தோணி, மாவட்ட குழு உறுப்பினர் அப்சல்அகமது, வட்ட குழு உறுப்பினர் பாலாஜி உட்பட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.அவரின் உடல் வியாழனன்று காலை அடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த தோழர் மணிகண்டனுக்கு மாரியம்மா என்ற மனைவியும், மணிமேகலை என்ற மகளும், சதிஷ் என்ற மகனும் உள்ளனர். பங்களாமேட்டில் உள்ள சுடுகாட்டில் மணிகண்டன் உடல் வியாழனன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.