districts

img

மக்களின் கோரிக்கைகளுக்காக 25 ஆண்டுகளாக ஒலிக்கும் குரல்

கடலூர், ஜூன் 26-

     கடலூரின் தொன்மையும், சுற்றுச்சூழல் சீர் கேடில்லாமல் தொழில் வளர்ச்சியும், சுற்றுலா மேம்பாட்டுக்கும், பாரம்பரியம் பல்லுயிர் பெருக்க காரணியான கொண்டங்கி ஏரி, மேல் ஏரி, கேப்பர்மலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

     கடலூரில் பாதுகாப்பான போக்கு வரத்தை உறுதிப்படுத்தவும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்துவும்,பொது இடங்களை பாதுகாக்கவும், வடிகால்களை சீரமைப்பதிலும், வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், கடலூர்  அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங் கள் கூட்டமைப்பு களத்தில் நின்று சமரசமின்றி போராடி வருகிறது.

      மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், டெங்கு விழிப்புணர்விற்கும் தொடர்ந்து மக்கள் சந்திப்பு இயக்கங்களை இந்த  கூட்டமைப்பு நடத்தி வருகிறது.இயற்கை  பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்கல்வி வரை கூட்டமைப்பு  படிக்க வைத்து வருகிறது. எந்த ஒரு அரசாங்க திட்டத்தை யும்  செயல்படுத்துவதில் அதற்காக மக்கள் கொடுக்கும் விலை (Social Cost) அதிகமாகக் கூடாது என்று தொடர்ந்து  போராடி வருகிறது.  

    கடலூர் பல வளர்ச்சி திட்டங்கள், பொது இடங்கள் பாதுகாப்பு போன்ற வற்றில் நீதிமன்றம் வரை சென்று வெற்றி  கண்டுள்ளோம்.

    புதிய கல்வி கொள்கையை எதிர்த்து குடியிருப்பு பகுதியில் 3 நாட்கள் பிரச்சாரம்  செய்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. கடலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், புதிய ரயில் பாதையாக கடலூர் - பாண்டி - பெருங்குடி வருவதற்கு தொடர்ந்து போராடியும் வெற்றி கண்டுள்ளோம்.

    வெள்ளிவிழா ஆண்டை கடந்து  26வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  குடியிருப்போர் கூட்டமைப்பு ஜூலையில் 6வது மாநாட்டை நடத்த திட்ட மிட்டுள்ளது. இதில் அனைத்து மக்கள்  பிரதிநிதிகள், மாதர் நல அமைப்புகள், பொது நல அமைப்புகள் பங்கேற்க உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் மக்கள் ஒற்றுமையை நிலை நாட்டு வதற்கும், பொதுத்துறை நிறுவனங்களை  பாதுகாப்பதற்கும் இயக்கம் நடத்துவதோடு, அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, கழிவு நீர் வெளி யேற்றம் போன்றவற்றில் தொடர்ந்து இயக்கம் கண்டு வெற்றி பெற்று வருகிறது.

    அசுரத்தனமான நகர்மய விரிவாக்கத்தில் மிகப்பெரிய பாதிப்பு நகர்புற, கிராமப்புற ஏழை மக்கள் தான்.  எனவே, தற்போதுள்ள நகர்மயக் கொள்கையை மக்கள் நலனை பாதிக்கும்  கொள்கையாக உள்ளது. இதை மாற்ற அனைத்து பகுதிகளுக்கும் சீரான வளர்ச்சி சென்றடையும் கொள்கையாக நகர்மயக் கொள்கையை மாற்ற, குடியிருப்போர் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. குழந்தைகள், பெண்கள், முதியோர் பாதுகாப்பை உறுதி  செய்ய தொடர்ந்து போராடி வருவதாக அதன் நிர்வாகிகள்  பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

    குடியிருப்போர் கூட்டமைப்பில் பதிவு  செய்துள்ள 168 நகர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கூட்டமைப்பை மேலும் விரிவுப்படுத்துவோம்.  இதன் மூலம் ஒட்டு மொத்த மக்கள் ஒற்றமையை உறுதி செய்வோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து குழந்தைகளுக்கு சயின்ஸ்கிளப் உருவாக்கி வருகிறோம்.  

    குடியிருப்போரின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்க, மகளிர் கைப்பந்து, கால்பந்து, ஆண்கள், பெண்கள் சிலம்பம் என்று இலவச பயிற்சி தொடர்ந்து நடத்துகிறோம். எங்கள்  பயணம், மக்களுக்கான பயணம், மக்கள்  நலனுக்கான பயணம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! இது என்றும் தொடரும் என  கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.வெங்கடேசன், பொதுச்செயலாளர் மருதவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.