திருவள்ளூர், ஆக.10-
கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75), இவர் கவரைப்பேட்டை ஆரம்பசுகாதார நிலையத்தில் கடந்த 11 ஆண்டுகளாக உதவியாளராக (ஆர்சிஎச் ஒர்க்கர்), பணியாற்றி வந்தார்.
இங்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு ஓ.பி.சீட்டு வழங்குவது, காயங்களுக்கு கட்டு போடுவது, சுகாதார நிலையத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு மாத ஊதியமாக ரூ.1500 வழங்கி வந்தனர்.
இந்த குறைந்த பட்ச ஊதியத்தை கூட கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் இழுத்தடித்து வருகின்றனர். மேலும் கடந்த 18 மாதங்களாக சம்பளத்தில் பிடித்தம் என்ற பெயரில் மாதம்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊதியமும் வழங்காமல், பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் வழங்காத நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்துள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கோவிந்தம்மாளின் குடும்ப சூழலை உணர்ந்து நிலுவையில் உள்ள ஊதியத்தையும், பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.