districts

img

தொடர்மழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர், செப். 28- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அடுத்த 10 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு ஓரளவுக்கு நீர் நிலைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து பாலாற்றுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், பாலாற்றின் துணை ஆறுகள் மலட்டாறு, அகரம் ஆறு, பொன்னை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.  கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை நிரம்பினால், அங்கிருந்தும் பாலாற்றுக்கு நீர்வரத்து இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து புல்லூர் தடுப்பணையை கடந்து 250 கன அடிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், பாலாற்றின் முக்கிய துணை ஆறான மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.