விழுப்புரம்,செப்.28- விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறியதால் 5 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது சம்பா பருவம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு போலி விதைகள், தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. உர மூட்டைகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று விவசாயிகள் தரப்பில் இருந்து புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து, வேளாண்மை துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தனர். இந்த குழு உரக்கடையில் பராமரிக்கும் பதிவேடுகள் ஆய்வு செய்தனர். அப்போது, உரக்கட்டுப்பாட்டு விதிகளை 5 கடைகள் மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உர விற்பனைக்கு தடை விதித்த அதிகாரிகள் அந்த கடைகளின் உரிமங்களை ரத்து செய்தனர். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.