districts

img

வழக்கு பதிவு செய்யாத காவல் நிலையம்

விழுப்புரம், அக்.28- விக்கிரவாண்டி அருகே விபத்து ஏற்படுத்தி தலித் இளைஞர் உயிரை பறித்தவர் மீது நான்கு மாதமாக வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வரும் கஞ்சனூர் காவல் நிலையத்தை (அக்.30) முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு விவசாயிகள் முடிவு செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டியான். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், கடந்த 5.6.2023 அன்று வாசி என்கிற பிரகாஷ் சாவு மேளம் அடிக்க சென்றார். அந்த சாவுக்கு வந்த புதுச்சேரி ராயல் கார்ஸ் உரிமையாளர் மகன், எட்டியான் மீது காரை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே எட்டியான் பலியானார். விபத்தை ஏற்படுத்தி எட்டியான் உயிரிழப்புக்கு காரணமானவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பது சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்திய பிறகு, கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் சேகர், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்யவில்லை. குற்றவாளியையும் கைது செய்யாமல் கடந்த நான்கு மாதங்களாக இழுத்தடித்து வருகிறார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் பல முறை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் இது நாள் வரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தலித் இளைஞர் எட்டியான் குடும்பத்திற்கு நியாயம் கேட்டும், குற்றவாளியை பாதுகாக்கும் காவல் ஆய்வாளர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அக்.30 அன்று முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமையில் கஞ்சனூர் காவல் நிலையத்தை முற்றுகை போடுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஆர்டி.முருகன், ஆர்.தாண்டவராயன், பி.சிவராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.