districts

img

சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் தற்காலிகமாக ஆவடி, பெரம்பூருக்கு மாற்றம்

சென்னை, மார்ச் 30- சென்னை சென்ட்ரல் வரும் சில முக்கிய ரயில்கள் தற்காலிகமாக ஆவடி, பெரம்பூருக்கு மாற்றம் செய்யப்படுகிறது.  சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் சில முக்கிய ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக, திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், கடற்கரை ரயில் நிலையங்களில் நிறுத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு ஊர்களிலிருந்து சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு பெங்களூரில் இருந்து வரும் மெயில் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து வரும் ஏற்காடு விரைவு ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும். ஏப்ரல் 2ஆம் தேதி ஆலப்புழாவில் இருந்து வரும் அதிவிரைவு ரயில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும். ஏப்ரல் 1ஆம் தேதி ஹவுராவில் இருந்து வரும் விரைவு ரயில் சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும். அதேபோல் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர், ஈரோடுக்கு செல்லும் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும். ஏப்ரல் 3ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து ஷாலிமா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும். மேலும், ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத், கொச்சுவேலி - கோரக்பூர், இந்தூர் - கொச்சுவேலி விரைவு ரயில்கள் சென்ட்ரல் வந்து செல்வதற்கு பதிலாக பெரம்பூர் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.