districts

img

எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் ஆவடியில் நிற்க வலியுறுத்தல்

சென்னை,ஜன.31- சென்னை ஆவடி வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்று வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வெ. ராஜசேகரன், பொதுச் செயலாளர் டி.சந்தான கிருஷ்ணன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்கள் உள்ளடங்கிய தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகின்றன. தாம்பரம், அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகள், ஆவடியில் இருந்து தாம்பரம் வரை இடையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மேற்கண்ட ரயில்களை பிடிக்க சென்ட்ரல் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகிறது. ஆனால் கால விரயம், கூடுதல் பணச் செலவு ஏற்படுகிறது. தற்பொழுது, ஆவடியில் இருந்து தாம்பரத்திற்கு (202), ஆவடியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் (206), ஏற்கனவே ஆவடியில் இருந்து பூந்தமல்லிக்கும், ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு நேரடியாக மாநகர பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

எனவே, சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி வழியாக வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களும், வெளியூர்களிலிருந்து ஆவடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டால் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், வேளச்சேரி, ஓ.எம்.ஆர் சாலை, இ.சி.ஆர் சாலை, வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம்,  கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெரிசல் குறையும். வெளியூரிலிருந்து வரும் பயணிகள் ஆவடியில் இறங்கி மேற்கண்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல பேருந்து வசதியும், மின்சார ரயில் வசதியும் உள்ளது. எனவே,  ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே பெரம்பூர் ரயில் நிலையத்தில் 90 விழுக்காடு  ரயில்கள் நின்று சென்னை செல்கிறது. அதேபோல், ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 4வது முனையமாக ஆவடியை தரம் உயர்த்தி, ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.