கடலூர்,ஆக.28- கடலூரில் நிலத்தடி நீர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்ட மைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடலூரில் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் 6-வது மாநாடு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் வழக்கறிஞர் எம். சிவமணி, தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்குகினார்கள். பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு தலைவர் மு. மருதவாணன், சாதனையாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இணைப் பொது செயலாளர் எஸ். கே. தேவநாதன் கல்வி உதவி பெறும் மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் எஸ்.வாவன்டினா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்து, கே.பசவலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த மாநாட்டில் ஸ்ரீ யுவ சூர்யா நாட்டிய இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் ஆர்.எம்.வி.கராத்தே சிலம்பக் குழுவினர் யோகா, அணு நிதிஷின் புல்லாங்குழல் இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டின் இறுதியில் பொருளாளர் பி .கே .வி. ரமணி நன்றி கூறினார்.
சாதனையாளர்களுக்கு பாராட்டு: பல்வேறு சாதனையாளர்களுக்கு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி எஸ்.ஜீவா, மற்றும் எஸ்.ஹேமலதா, எஸ்.வேம்பு , கே .இந்துமதி, எம். கார்த்தி, ஸ்ரீமதி ராஜேந்திரன், மருத்துவர் பி.இளந்திரையன், மருத்துவர் பி.பாஸ்கர், ஆர்.வெங்கடேஸ்வரன், சஹானா, பி.ராமு, சபரி வேலன், மாரியப்பன், சிவ பால சங்கர் ,எஸ்.கே. தேவநாதன், ஜாபர் அலி, சரவணன், ஹரிதா ஹரி சகஸ்ராம அறக்கட்டளை, செல்லா, வனிதா, திரு நங்கை ரக்க்ஷிதா, 100 முறை ரத்தம் கொடுத்த 5 ரத்தக் கொடையாளர்கள், ஆகியோர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விருது வழங்கினர். தீர்மானம்; இந்த மாநாட்டில் கடலூரில் நிலத்தடிநீரை பாதுகாத்தல், சுற்றுலாவை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுத்தல், பாதுகாப்பான போக்குவரத்து, கெடிலம் மற்றும் பெண்ணையாற்று கரையை பலப்படுத்துதல், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.