சென்னை, மார்ச் 18- மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மீன்வள மசோதவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மீனவர் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் கடலோர மாவட்ட தலைநகரங்களில் வெள்ளியன்று (மார்ச் 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைப்பாளர் பா.கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) மாநில பொரு ளாளர் ஜெய்சங்கர், துணை செயலாளர் ஆர்.லோகநாதன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராபர்ட்சன், மீனவர் மக்கள் காப்போம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கட், மீனவர் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) மாவட்டத் தலைவர் பாஸ்கர், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.கருணாநிதி தேசிய மீன்வள மசோதா 2019ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீனவர் சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.