districts

img

மக்களின் உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பார்க்கும் ரங்கசாமி!

புதுச்சேரி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்

புதுச்சேரி, ஏப்.7- ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று  நினைக்காதீர்கள். அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பாஜக  கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமிக்கும்  ஏகப்பட்ட நெருக்கடி” என்று புதுச்சேரி யில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (ஏப்.7), புதுச்சேரியில் நடை பெற்ற 2024 மக்களவைத் தேர்தல்  பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், “புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் திமுகவும் காங்கிரசும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பாஜக செயல்படுகிறது. 

இலவச அரிசியை கேள்வி கேட்டவர்

மக்களுக்கான அடிப்படை வசதி களைச் செய்து தராமல், அந்த வசதிகள்  இல்லை என்று காரணம் காட்டி ரேசன் அரிசியைத் தடை செய்தார். புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும், வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டார்.  இப்படி செய்தவர்கள் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக  இருந்த நம்முடைய நாராயணசாமிக்கு  ஒத்துழைக்காமல் அரசியல் சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத் தது பாஜக. இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளு நராக இருந்த கிரண் பேடி. 

காவல்துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் பதவி 

இப்படி, தமிழகத்திலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐபிஎஸ்-ஆக இருந்தவர்தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர்  இருந்தால், திமுகவுக்கு அங்கு பெரிய பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பாஜகவின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்துக்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது,  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களுக்கு மட்டும்தான் என்று நினைக்கா தீர்கள். ஆளும் பாஜக கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி கொடுக்கிறார்கள்.

அவலைநிலை மாற

இந்த அவலங்கள் எல்லாம் தீர,  இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு  வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாய கப் பாதையில் கம்பீரமாக நடைபோட வேண்டும். மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்திருக்கிறோம். புதுச்சேரி முன்னேற வேண்டும். புதுச்சேரி மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், பாஜக ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும். இந்தியா கூட்டணி தில்லி யில் ஆட்சியில் அமர வேண்டும்.

புதுச்சேரிக்கு இந்தியா கூட்டணியின் வாக்குறுதி

ஜுன் 4-ம் தேதிக்குப் பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமையும் போது, சாதனைகளாக மாறப்போகும்  வாக்குறுதிகளைச் சொல்லியிருக் கிறோம். அதில் முக்கியமான வாக் குறுதியான, புதுச்சேரிக்கு முழு மாநில  அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது காங்கிரஸ்  தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித் திருக்கிறது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான, மாநில அந்தஸ்து ஜுன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், நிறைவேறப் போகி றது. இந்தியா கூட்டணி சார்பில், சமூக நீதியைக் காப்பாற்ற, இடஒதுக் கீட்டைப் பாதுகாக்க, மதச்சார் பின்மையை நிலைநாட்ட, இந்தியா ஜனநாயக நாடாகத் தொடர சபதம் எடுத்துள்ளோம்.

மின்சாரத்தை தனியாரிடம் கொடுக்க சதி

கடந்த பத்தாண்டுகால மோடி  ஆட்சியில் புதுச்சேரிக்கு இழைக்கப் பட்ட அநீதிகள் அதிகம். மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரை  வார்க்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக் கிறது. மின் ஊழியர்களின் வாழ்க்கை  கேள்விக்குறியாகிவிட்டது. மின் கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது.  புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் துணைநிலை ஆளுநர்களை வைத்து, அரசியல் கூத்துகளை மோடி அரசு  அரங்கேற்றிக் கொண்டு இருந்தது.

 பெஸ்ட் புதுச்சேரி ஆக்கினாரா?

இங்கு வாக்கு கேட்டு வந்த பிரதமர்  மோடி என்ன கூறினார். “பெஸ்ட் புதுச்சேரி“. தொழில், சுற்றுலா, கல்வி போன்றவற்றில் புதுச்சேரியை பெஸ்ட் ஆக்குவோம் என்று சொன்னாரே, செய்தாரா? காங்கிரஸ் அரசிடம் ஏதோ  ரிப்போர்ட் கார்டெல்லாம் கேட்டாரே, பத்தாண்டுகால பாஜக ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே?   புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற  விடுதலையை, மக்களின் உரிமையை மத்திய மோடி அரசு பறிக்க விட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி, இப்போது எந்த முகத்துடன் பாஜக வுக்காக வாக்குகள் கேட்டு வருகிறார்?  இதில் மற்றொரு பக்கம் பாதம்தாங்கி  பழனிசாமியின் அதிமுக வருகிறார்கள்.  அதிமுக கூட்டணியைப் பற்றி சொல்வ தற்கு ஒன்றும் இல்லை. சிம்ப்ளி வேஸ்ட். பாஜக வேட்பாளரின் நன்மைக் காகதான் அதிமுக இங்கு தேர்தலில் நிற்கிறது என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வைத்தி லிங்கம் கை சின்னத்தில் போட்டியிடு கிறார். அவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கும் வாக்கு. புதுச்சேரியைக் காக்கும் வாக்கு.

பிரபஞ்சனின் வரிகளில்

 நிறைவாக, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வரிகளில் முடிக்கிறேன். “புதுச்சேரி என்பது படுத்துக் கொண்டிருக்கும் சிங்கம். அந்த சிங்கத்துக்கு சோதனை வந்தால் அது சிலிர்த்து எழும்”. அந்த வரிகளை உண்மையாக்க,புதுவை காக்க புதுவை மக்களே எழுக, என்று உங்கள்  ஸ்டாலின் அழைக்கிறேன். வருகிற மக்களவைத் தேர்தலில்  புதுவைத் தொகுதியில் நம்முடைய  இந்தியா கூட்டணி கட்சியின் காங்கி ரஸ் அங்கீகாரம் பெற்ற வேட்பா ளர் வைத்திலிங்கத்துக்கு நீங்கள்  கை சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறேன்”  இவ்வாறு மு.க.ஸ்டாலின் என்று பேசினார்.

அப்போ எதிரி; இப்போ தோஸ்து

‘‘ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணமே நமசிவாயம் தான். இப்போது அந்த நமசிவாயத்துக்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்தக் கட்சியையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஜனநாயகமா? உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருந்த வரை, தேர்தலில் நிறுத்தியிருக்கிறார். நமசிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார். திமுகவில் இருந்த நமசிவாயம், மதிமுக வுக்குத் தாவினார். மதிமுகவில் இருந்து தமாகாவுக்குத் தாவினார்.  தமாகாவில் இருந்து புதுவை மாநில காங்கிரசுக்கு தாவினார். புதுவை மாநில காங்கிரசில் இருந்து மீண்டும் தமாகாவுக்குத் தாவினார். தமாகாவில் இருந்து காங்கிரசுக்குத் தாவினார். காங்கிர சில் இருந்து பாஜகவுக்கு தாவினார். இன்னும் இரண்டு மாதம் கழித்து நான் வந்தால் அவர் எந்தக் கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமசிவாயத்துக்கே தெரியாது.’’

பாஜகவின் கைப்பாவை ரங்கசாமி

‘‘பாஜகவைப் பொறுத்தவரைக்கும், புதுச்சேரியின் முன்னேற்றம் - மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்;  அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான் பாஜக வின் கொள்கை. ஒட்டுமொத்தமாக எல்லோரும் தில்லிக்குக் கீழ்  இருக்க வேண்டும். இதுதான் பாஜகவின் அஜெண்டா. அதனால் தான், கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து  கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பாஜக. அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதல்வர்.’’

வீரவசனம்  பேசிய மவுனகுரு மோடி

‘‘ பாஜகவால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? “நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார், கைது  செய்யப்பட மாட்டார்” என்று வீரவசனம் பேசினாரே பிரதமர் மோடி.  ஆனால், இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள்  கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா? படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா? அவர் விஷ்வகுரு இல்லை, மவுனகுரு. அதுமட்டுமல்ல, பாஜக கூட்டணி ஆட்சி யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப் பட்ட படுபாதகச் செயல். நாடே அந்தச் செய்தியைக் கேட்டு  அதிர்ச்சியடைந்ததே, பாஜக கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது.’’