districts

விழுப்புரம் அருகே வாய்த்தகராறு கொலையில் முடிந்த பரிதாபம்

விழுப்புரம், ஜூலை 21-

    விழுப்புரம் மாவட்டம்,வளவனூர் அடுத்து சென்னை - கும்பகோணம் சாலையில் ப.வில்லியனூர் கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் அரிகிருஷ்ணன் (36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்தராஜ் (38). இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இருவரும் அண்ணன், தம்பி உறவு முறை. விவசாயக் கூலி மற்றும் சமையல் வேலை தொழிலாளர்கள்.  

   ஆனந்தராஜ் வீட்டில் இருந்த மரத்தின் இலைகள், அரிகிருஷ்ணன் வீட்டில் விழுந்துள்ளது. இதனால், மரக்கிளையை வெட்டுமாறு ஆனந்தராஜிடம் அரிகிருஷ்ணன் கூறியுள்ளார்.

   இதில் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. அப்போது ஆனந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரிகிருஷ்ணனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அரிகிருஷ்ணன் உயிரிழந்தார்.

     பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் காவல் துறையினர் அரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

     இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜ், அவரது மனைவி விஜயா, மூத்த மகன் ஈஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர்.