கடலூர்,செப்.23- வறுமை கோடு கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வட்டத்தில் பிரதம மந்திரி, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட உடனடியாக பணி உத்தரவு வழங்க வேண்டும், அரசாணையின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கணக்கெடுத்து, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும், தகுதியற்றவர்களை நீக்கி குளறுபடிகளை களைய வேண்டும், அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி முழு சம்பளம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் எஸ்.கே.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஉதய குமார், எஸ்.திருஅரசு, மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், வட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், ஏ.பன்னீர், பி.குமரகுருபரன், எம்.கவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.