கிருஷ்ணகிரி,அக்.25- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழ் இணைந்துள்ள தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், விநியோகம் செய்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சி புதனன்று கிருஷ்ணகிரி அண்ணாஜி நினைவகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முருகேசன்,மாவட்டத் துணைத் தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைச் செயலாளர் பி.பெருமாள் சங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினார். கோழி வளர்ப்பு விவசாயிகள் விநியோகம் செய்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நலன் கருதி தனி நல வாரியம் அமைத்திடவும், காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வங்கி கடன், கறிக்கோழி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், ஒரு கிலோ கோழி வளர்ப்பிற்கு 6.50 ரூபாய் 20ஆக உயர்த்த வேண்டும், வெயில் காலத்தில் கிலோவுக்கு ரூ. 5 கூடுதலாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவராக நாராயணன், செயலாளராக எம்.எம்.ராஜூ, பொருளாளராக சின்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் வாழ்த்தி பேசினார். வட்டச் செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்.