districts

img

பொது இடத்தை மீட்டுத்தர தலித் மக்கள் வலியுறுத்தல்

விழுப்புரம், பிப். 26- விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மொரட்டாண்டியில் தலித் மக்களுக்கு சொந்தமான பொது இடத்திற்கு பட்டா பெற்று, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய தனிநபர் முயன்று வருகிறார். அந்த இடத்தை மீட்டு தர வலியுறுத்தி அப்பகுதி தலித் மக்கள், வழக்கறிஞர் சுரேஷ்குமார், சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று (பிப். 26) மனு அளித்தனர் இந்த மனுவின் சுருக்கம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், மொரட்டாண்டி கிராமத்தில் 120 தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர். நாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு நடுவில் பழைய சர்வே எண் 196/1பி, புதிய சர்வே எண்: 217/4, தற்போதைய உட்பிரிவு 217/4பி சுமார் 53 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த மந்தைவெளி பொது இடத்தை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். திருவிழாக் காலங்களில் சாமி ஊர்வலங்கள் இங்கிருந்துதான் புறப்படும். மேலும், கலைநிகழ்ச்சிகளும் இந்த மந்தைவெளியில் நடைபெறும். மேலும் இது அப்பகுதி இளைஞர்கள், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் ஆகவும் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு, மோட்டார் கொட்டகையும் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தான் இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி மன்றத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த மந்தைவெளி இடத்தை புதுச்சேரியை சேர்ந்த சம்பத், அவரின் மகள் நளினி, சம்பத்தின் மேலாளர் காசி ஆகியோர் தற்போது உரிமை கொண்டாடுகின்றனர். மேலும் அடியாட்களுடன் வந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர்.   எனவே காலம் காலமாக பயன்படுத்தி வரும் அந்த மந்தைவெளியை தனி நபரிடம் இருந்து மீட்டு மீண்டும் எங்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.