districts

img

கடல் அரிப்பால் கரையும் கடலூர் வெள்ளி கடற்கரை

கடலூர், ஜன.7- கடலூர் வெள்ளி கடற்கரை மணல் பரப்பு படிப்படியாக ஏற்படும் கடல் அரிப்பினால் கரைந்து போகும் அபாயத்தில் இருக்கிறது.  கடலூர் வெள்ளி கடற்கரை இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலூர் நகரத்தின் மையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இருப்பினும், கோரமண்டல் கடற்கரையில் இரண்டாவது நீண்ட கடற்கரையும், ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையோரங்களில் இதுவும் ஒன்றாகும். இது சென்னை மெரினா கடற்கரையை அடுத்து இரண்டாவது பெரிய கடற்கரையாக விளங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்பரப்பில் மிக அழகானதும், பறந்து விரிந்த மணல் பரப்பைக் கொண்டதுமான வெள்ளி கடற்கரை அமைந்திருந்தது. மேலும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலைகள் தாக்கிய போது சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் படகு குழாம் அடித்துச் செல்லப்பட்டன.  இதன் பிறகு சில்வர் கடற்கரைபகுதியை மேம்படுத்தும் பணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அருகில் நின்று கடல் அலையை ரசிக்கவும், அமர்ந்து பார்க்கவும் வசதியாக கான்கிரீட்டாலான கூம்பு வடிவில் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மேலே சென்று கடலின் அழகை ரசித்து வந்தனர். இரவை பகலாக்கும் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.   நாகப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக இந்த கடற்கரை 2004 ல் ஏற்பட்ட ஆசிய சுனாமியால் இரண்டாவது மிக அதிக பாதிப்புள்ள பகுதியாக இருந்தது. இச்சுனாமியால் சுமார் 2,700 க்கு அதிகமானவா்கள் இப்பகுதியில் இறந்திருக்கிறார்கள். இதன் பிறகு கடல் நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக நடைபாதையின் (சிமெண்ட் சாலை) ஒரு பகுதியும், கூம்பு வடிவ கூண்டும் நீரில் மூழ்கி வெளியே தெரியாமல் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் கடல் சீற்றத்தால் 100 மீட்டர் நீளத்திற்கு  மேல்  வெள்ளி கடற்கரையின் மணல் பரப்பை விழுங்கிவிட்டது.  இந்நிலையில் அவ்வப்போது ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடல் அலையின் சீற்றம் அதிகரித்து அதன் காரணமாக தற்போது அந்தப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் நடைபாதையின் ஒரு பகுதி கடல் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த கூம்பு வடிவ கூண்டும் சேதமடைந்து கடலில் மூழ்கியது. மின் கம்பங்களும் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மேலும் மண் அரிப்பு காரணமாக தற்போது பொதுமக்கள் அமரும் இடம் வரையில் கடல் அலைகள் வந்து செல்கிறது. உடைந்த சிமெண்ட் சாலைகள், கடல் அலையை ரசிக்கும் கூம்பு வடிவிலான கான்கிரீட்டிலான கூண்டு ஆகியவை சிதிலமடைந்து வெளியே தெரிகின்றன. இந்த நிலை நீடித்தால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் அபாயம் உள்ளது என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது சில்வர் பீச்சை மேம்படுத்த பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணியரை ஈர்ப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்காக, கடற்கரைகளுக்கு சர்வதேச அளவில் 'நீல கொடி' சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கடலூர் வெள்ளி கடற்கரை நீல கொடி சான்று பெறுவதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விண்ணப்பம் செய்துள்ளது. எனவே முதற்கட்டமாக கடல் அலையின் சீற்றத்தால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரத்தில் கற்கள் கொட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், கடற்கரையின் மணல் பரப்பை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கடற்கரையை தூய்மையாக வைத்து சுற்றுலா பயணிகளை கவர வேண்டும். நீண்ட காலமாக பழுதடைந்துள்ள படகு குழாமை சீரமைத்து, படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சமூகசெயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.