districts

img

போலீசார் தாக்கியதால் தொழிலாளி தற்கொலை

சிதம்பரம், செப் 1- காட்டுமன்னார்குடி நகரம் உடையார்குடி தியாகராஜ தெருவில் வசிக்கும் காமராஜ் (50)  தங்க நகை செய்யும் தொழிலாளி.  சனிக்கிழமை இரவு பெரியார் நகரில் அவரது  நண்பர் வீட்டில் பிறந்த நாள் நிகழ்சியில் கலந்துகொண்டு அந்த தெருவில் ஒரு வீட்டிற்கு முன்பு  நீண்ட நேரம் அமர்ந்துள்ளார்.  இதனை அந்த வீட்டில் உள்ளவர்கள் பார்த்து தவறாக  புரிந்துகொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.  அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காமராஜை அப்புறபடுத்தியுள்ளனர். இவர் குடிபோதையில் இருந்தால் காவல்துறையினருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு செல்போனை வாங்கிகொண்டு அடித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து  காமராஜ் தனது மகன் சந்தோஷிடம்  கூறியுள்ளார்.  பின்னர் இரவு நேரத்தில் தந்தையும் மகனும் காவல்துறையினரை சந்தித்து  ஏன் அடித்தீர்கள் எனக்கேட்டுள்ளனர்.  அப்போது காவல்துறையினர் தந்தை,மகனையும் தாக்கியுள்ளனர். இதனால் அவமானம் தாங்கமுடியாமல் மனஉளைச்சலால்  காமராஜ் நகை தொழில் செய்யும் அவரது கடைக்குச் சென்று சயனைடு விஷத்தை குடித்துள்ளார். உடனடியாக காமராஜை  மீட்டு காட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, வட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், சிங்காரவேலு, விமலக்கண்ணன், சாகுல் அமீது, கிளை செயலாளர்கள் உஸ்மான், நீலமேகன், தினேஷ் பாபு, குமார். குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் மணவாளன், தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவணன், நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர் மரணம் அடைந்த காமராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறை யின் தாக்குதலால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர் குடும்பத்திற்கு  தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணமும், தற்கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.