சென்னை, டிச. 8 - மிக்ஜம் புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இரவு பகலாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், குடிசை பகுதிகளை கொண்டது எழும்பூர் தொகுதி. உழைப்பாளிகள் அடர்த்தியாக வாழும் பகுதியாகவும் உள்ளது. சிறு மழை பெய்தாலும் மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. மிக்ஜம் புயலால் தொகுதிவாசிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகினர். இதனால் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். தொகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. மழை நீர் வடிந்த இடங்களில் விரைந்து குப்பைகள் அகற்றப்படாததால் நோய் பரவும் நிலை உள்ளது. வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி மக்களுக்கு உணவு வழங்குவது, நிவாரணப் பொருட்கள் தருவது போன்ற நிவாரணப் பணிகளை மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.