districts

மாநகராட்சியின் இயற்கை உரம்: மலிவு விலையில் விற்பனை

சென்னை, ஏப்.17 - மாநகராட்சி தயார் செய்யும் இயற்கை உரம் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் தினசரி 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நுண் உரமாக்கும் மையங்களில், இந்த உரம் மிகவும் இயற்கையான முறையில் தயார் செய்யப்படுகிறது. இந்த உரத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஞாயிறன்று (ஏப்.17) பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ உரம் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.