districts

img

10 நாட்களில் பழங்குடி சான்றிதழ் பொன்னேரி கோட்டாட்சியர் உறுதி

திருவள்ளூர், அக் 10- கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப் பாக்கத்தில் வசிக்கும் மலைக்குறவன் இன மக்களுக்கு அடுத்த 10 நாட்களில் பழங்குடி இன சான்றிதழ் (எஸ்.டி), வழங்கப்படும் என பொன்னேரி கோட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததால் காத்தி ருக்கும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதி மொழியை அதிகாரிகள் நிறைவேற்றாத தால் செவ்வாயன்று (அக்.10), பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர்  அறிவித்திருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் ஆத்துப் பாக்கம் சென்று குறவன் இன மக்களை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க முயன்றனர். இதனை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் தரப்பிலிருந்து பேச்சு வார்த்தைக்கு தலைவர்களை அழைத்தனர். கோட்டாட்சியர்  கவுசல்யா (பொறுப்பு), தலைமையில் ஆர்டிஒ அலுவலகத்தில் செவ்வாயன்று (அக் 10) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அடுத்த 10 நாட்களில் பழங்குடி இன (எஸ்.டி), சான்றிதழ் வழங்குவதாக  எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை, மதி, சிவா, சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோக நாதன், வேட்டைக்காரன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ராஜா, மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டிக்சன், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.எம்.அனீப், வி.குப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.