வேலூர், நவ.1- வேலூர் மாவட்டத்தில் சிதறிக் கிடந்த பீடித் தொழிலாளர்களை ஒன்று திரட்டி சங்கம் அமைத்து போராடி பி.எப். போனஸ், விடுப்பு நாள் சம்பளம், வீடு கட்டும் திட்டம், மருத்துவ திட்டம் உள்ளிட்ட சட்ட சலுகைகளை பீடித் தொழி லாளர்களுக்கு பெற்றுத்தந்தவர், தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன ஸ்தாபக தலைவர், வேலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி தோழர் வே.கண்ணன். அவரது 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி வேலூர் அடுத்த கருகம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் தொடங்கி வைத்தார். மந்தைவெளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பீடி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, சம்மேளன தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் எம்.கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் எம்.காசி, பி.காத்தவராயன், ஏ.பழனியப்பன் உள்ளிட்ட சிஐடியு, பீடித் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.