திருவண்ணாமலை, ஏப்.27- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ‘என் கல்லூரிக்கனவு” மாணவர்களுக்கான உயர்கல்வி வழி காட்டல் கருத்தரங்கம் திருவண்ணாமலை யில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டு மில்லை கல்வியை பயன்படுத்தி நமது வாழ்வை எப்படி சிறப்பாக அமைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். உலகத்திற்கே எழுத்தறிவித்த சமூகம் நமது தமிழ் சமுதாயமாகும். சங்க காலத்தில் நமது சமூகத்தில் பெண்பால் புலவர்களும், அரசருக்கு அறிவுரை கூறும் இடத்தில் இருந்தார்கள். கல்வியே ஒருவருக்கு சிறந்த செல்வமாகும். எந்த தொழில் செய்தாலும் அதில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். மருத்துவம் மட்டுமே கல்வி என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகள் மூலமாகத்தான் நமது திறமைகள் முழுவதும் வெளிவரும். நெருக்கடிகளை கையாள அனைவரும் கற்றுக்கொள்ள வேணடும் என்று பேசினார். இந்த கருத்தரங்கில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், போளூர் மற்றும் ஜவ்வாதுமலை ஒன்றியத்தை சார்ந்த சுமார் 1200 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.