districts

img

உருக்குலைந்து போன ராமநாயக்கன் ஏரி

கிருஷ்ணகிரி, செப்.6- ஓசூர் சாராட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள  ராமநாயக்கன் ஏரி 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1995 ஆம் ஆண்டு வரை எப்போதும் நீர் நிரம்பி  கடல் போல் காட்சியளிக்கும். மேற்கு,கிழக்கு பெரிய ராஜ கால்வாய்கள் தர்கா சந்திராம்பிகை, வெங்கடேஷ் நகர் ஏரிகளை நிரப்பும். ஏரியின் வடக்கு கரையில் இருந்த  பழமை வாய்ந்த மிக நீண்ட படித்துறைகள் ஓசூரின் 90 விழுக்காடு மக்களுக்கும் குளிக்க, துவைக்க, மாலை நேரங்களில் ஆசுவாசமாக படித்துறைகளில் அமர்ந்து வேடிக்கை பார்க்க, மீன் பிடிக்க என பொழுதுபோக்கு இடமாகவும் இருந்தது.  தனியார் தொழிற்சாலை மயம், நகர மயம்,நில விற்பனை வியாபார பண வெறி,ஓசூர் நிர்வாகத்தின் எதையும் கண்டுகொள்ளாத போக்கு ஏரியின் கழுத்தை நெரித்து குட்டையாக மாறி வருகிறது.  வடக்கு கரையில் ஏரியை ஒட்டி பாலமாக சாலை அமைப்பதற்கு பதில் ஏரிக்கரையில் இருந்த நீண்ட படித்துறைகள்,ராஜாக்கள் கால நான்கு கால் மண்டபம் அழிக்கப் பட்டு  ஏரியில் மண்ணைக் கொட்டி 4 வழி சாலை அமைக்கப்பட்டது.  மேற்கு கரையில் மக்கள் நடை பயிற்சி பாதையாகவும், தெற்கு ரயில்வே ரோட்டை ஒட்டி உள் வட்ட சாலைக்கும் ஏரியின் பரப்பு அரசு நிர்வாகத்தால் வெட்டப்பட்டது. கிழக்கு கரை ஓரத்தில் சாந்தி நகர் உருவாக்கப்பட்டு பல ரியல் எஸ்டேட் பண முதலைகளால் ஏரி விளிம்புகளிலும் பட்டா போட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டு ஏரியின் கிழக்கு பகுதியில் ஆக்கிர மிப்புக்குள்ளானது. நகரமய வேகத்தில் ஏரியின் இரண்டு ராஜ கால்வாய்களும் (33 அடி அகலம்) ஆக்கிரமிக்கப் பட்டு சிறிய கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தளி, கர்னூர் ஏரிகள் உபரி நீர் வரத்து  கால்வாய் ஆக்கிரமிப்பு நீர்வரத்தும் நின்று போனது. கிழக்கு கரையோரம் நடை பாதை அமைக்க ஏரியின்  பரப் பளவு சுருங்கி வருகிறது.

போதாக் குறைக்கு ஏரியில் நீர் இருப்பதே தெரியாதபடி வளர்ந்திருக்கும்  ஆகாயத்தாமரை செடிகள் ஜேசிபி மூலம் அள்ளப்பட்டு கரை ஓரம் ஏறிக்குள்ளயே நீர் நிற்கும் பகுதியில் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு எடுக்கப்பட்ட செடி கழிவுகள் ஏரியை விட்டு அகற்றப்படாததால் சில மாதங்கள் சென்ற பிறகு அந்த இடம் மேடாகி நீர் நிற்கும் பரப்பும் குறைந்து வருகிறது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பது போல் 160 ஏக்கர் ஏரி தற்போது 60 ஏக்கர் இருக்குமா என்பது சந்தேகம் தான். இதுகுறித்து பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதன் விளைவு ஏரியின் பரப்பளவு சுருங்கி உருக்குலைந்து விட்டது. மேலும், நகரின் கழிவு நீர் தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஓசூர் மாநகராட்சியாக மாறிய பின்னும் ஏரியை சுத்தப் படுத்தி அழகு படுத்தும் பணி என்று பல  கோடிகளில் திட்டம் அறிவிக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. இதே நிலை நீடித்தால் இருக்கும் பரப்பளவும் மிக விரை  வில் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்பதால், ஏரியின் கிழக்கு கரையோரம் 200 மீட்டர் நீளத்துக்கும், நூறு மீட்டர் உட்புற மாகவும் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேட்டை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டும், தூர்வாரி ஆழப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்திருக்கிறது.