திருவள்ளூர், ஜூலை 11- ஆண்டுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சூப்பர் பில் நிறுவன தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள சூப்பர் பில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் மீன் வலைகள் பின்னும் நைலான் இழைகள் தயாரிக்கப்படுகிறது. இதில் 120 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் ஆண்டுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 4 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பாரபட்சம் இன்றி நிர்வாகம் செயல்பட வேண்டும், அகவிலைப்படி திருத்தி வழங்க வேண்டும், வேலை பளு சம்பந்தமாக பேசி தீர்வு காண வேண்டும், சங்கங்கத்தை அங்கிகரிக்க வேண்டும், பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும், கேண்டீன் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும், போக்குவரத்து படி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டை ரூ.5 லட்சத்திற்கு உயரத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 8 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தொழிலாளர்கள் பிரச்சி னைகளுக்கு சுமுக தீர்வு காண, மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.