districts

img

கிரவுண் பிளாசா ஓட்டலை மூடுவதை அரசு தடுக்க வேண்டும்: சிஐடியு

சென்னை, ஜன. 1 - கிரவுண் பிளாசா ஓட்டல் மூடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. சென்னை நகரின் பிரபலமான ஓட்டல்களில் ஒன்றாக கிரவுண் பிளாசா விளங்கியது. தொழிலதிபரான டி.டி.வாசு தொடங்கிய அடையார் கேட் ஹோட்டல்,  பின்னர் கோயல் குழுமத்திற்கு விற்கப் பட்டது. அதன் பின்னர், இதை வாங்கிய பிரபல ஐடிசி நிறுவனம், பார்க் ஷெரட்டன் எனவும், பின்னர் கிரவுண பிளாசா எனவும் பெயரை மாற்றியது. தற்போது இந்த ஓட்டலை வாங்கியுள்ள பாஷ்யம் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது. 5.5 ஏக்கர் பரப்பளவில் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஓட்டலில் 550 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிலாளர்கள் பொதுக் கோரிக்கை, போனஸ் உள்ளிட்ட தொழில் தகராறு எழுப்பி தொடர்ந்த வழக்கு தொழிலாளர் துறையில் நிலுவையில் உள்ளது. இது குறித்து சிஐடியு தென் சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி கூறுகை யில், தொழிலாளர்கள் எழுப்பிய தொழில் தகராறு பிரச்சனையின் கீழ் தொழிலாளர் துறை பிரிவு 12 (1)ன் கீழ் நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் பணியிழப்பு தொழில் தகராறு சட்டம் 9ஏ-விற்கு விரோதமானது என்பதால் 12(1) நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும். இதனை செய்ய தொழிலாளர் துறை உதவி ஆணையர் மறுத்து விட்டார். இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  தமிழக அரசு ஓட்டலை மூட தடை விதிக்க வேண்டும் என்றார்.