புதுச்சேரி, மார்ச் 30- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சி வாயத்தை ஆதரித்து அரியாங்குப்பம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ரங்கசாமி ஈடுபட்டிருந்தார். திறந்த வாகனத்தில் நின்ற படி பெண்களிடம் வாக்கு கேட்டுக் கொண்டிருந்த போது முதல்வர் ரங்கசாமியிடம், கூடியிருந்த பெண்கள் எங்களுக்கு நீண்ட காலமாக மனைப்பட்டா வழங்க வில்லை. மனைப்பட்டா வழங்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதால், அந்த பணத்தை கணவர்கள் பறித்துச் சென்று மது குடிக்கின்றனர். எனவே ரேசன்கடைகள் மூலம் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது முதலமைச்சர் ரங்கசாமி இந்த பணத்தை எடுத்து சென்றுதான் குடிக்கிறார்களா? என பதில் கேள்வி எழுப்பினார். பிரச்சனையை சமாளிக்க மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி யோடு, அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பேசி அந்த இடத்தில் இருந்து நழுவினார். புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆட்சியாளர் களை வலியுறுத்தியும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பிரசாரத்தின்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.