districts

சென்னை முக்கிய செய்திகள்

தூய்மை நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு பின்னடைவு

சென்னை, ஜன. 12- இந்தியாவில் மிக தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஒன்றிய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இதற்காக  நாடு முழுவதும் உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து  விருதுக்கான  பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தூய்மையான நகர மாக இந்தூர் மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளது. சூரத் (2-வது இடம்)  நவி மும்பை (3 வது இடம்) புதுடெல்லி (7வது இடம்) ஐதராபாத் (9-வது இடம்) அகமதா பாத் (15-வது இடம்) லக்னோ (44-வது இடம்)  பெங்களூர் 125-வது இடத்திலும் உள்ளன. 446 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி இந்த பட்டியலில் 112-வது இடத்தை பிடித்துள்ளது. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நகரம் தரவரிசையில் 50க்குள் இடம்பெற்றிருந்தது.

பொங்கல் விடுமுறை நாட்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ

சென்னை, ஜன.12-  பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில்  ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8மணி வரை 7 நிமிட இடைவெளியிலும்  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அந்நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சாலை விபத்தில் சகோதரிகள் பலி

சென்னை, ஜன. 12- திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பவானி (38), சுபா (37). அக்கா தங்கையான இருவரும் மீன் வியாபாரம் செய்து வந்தனர்.  இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அவர்கள்  காசிமேடு செல்ல எண்ணூர் எக்ஸ்பிரஸ்  சாலையை கடக்கும் போது வேகமாக வந்த உயர் ரக  மோட்டார் சைக்கிள் வந்தவர் இருவர் மீதும் மோதியது. இதில்  தலையில் பலத்த காயமடைந்த சுபா சம்பவ இடத்திலேயே பலியானார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பவானியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பரத் (20), ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (20) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூய்மையில் சிறந்து விளங்கும் நகர  தரவரிசை பட்டிலில் மறைமலைநகர் நகராட்சி

செங்கல்பட்டு, ஜன.12-   தேசிய அளவில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் முடிவுகளை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். தமிழகத்தில் 20மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன.இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் என 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மறைமலைநகர் நகராட்சி தரவரிசை பட்டியலில் முதல் இடமும், மதுராந்தகம் 57-வது இடமும், செங்கல்பட்டு 93-வது இடமும் பெற்றுள்ளன. தாம்பரம் மாநகராட்சி 13-வது இடமும், பேரூராட்சிகளில் கருங்குழி 135-வது இடமும், திருப்போரூர் 208-வது இடமும், அச்சிறுப்பாக்கம் 308-வது இடமும், திருக்கழுக்குன்றம் 322-வது இடமும், மாமல்லபுரம் 369-வது இடமும்,இடைக்கழிநாடு 540-வது இடமும் பிடித்துள்ளன. மறைமலைநகர் நகராட்சி தமிழக அளவிலும் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்டதரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்

வேலூர் ஜன.12 - வேலூர் மாநகராட்சி கூட்டம்  மேயர் சுஜாதா தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்தி ரன், மண்டல குழு தலை வர்கள் மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா பேசுகை யில், காட்பாடி ரயில் நிலை யத்தில் தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 10 நாட்களாக எரியவில்லை. இது குறித்து ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை”என்றார். 10வது வார்டு உறுப்பி னர் அதிமுக  கே.பி.ரமேஷ்  பேசுகையில், சில புகார் களை கூறினார். அப்போது,   12வது வார்டு திமுக உறுப்பி னர் டீட்டா சரவணன், 2-வது மண்டல குழு தலை வர் வீனஸ் நரேந்திரன் மற்றும் திமுக கவுன்சிலர் கள் அதிமுக கவுன்சிலர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிமுக உறுப்பினர் ரமே ஷிடம் இருந்து மைக்கை பறிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புகையில்லா போகி: ஆட்சியர்கள் வேண்டுகோள்

விழுப்புரம்,ஜன.12- பொங்கலுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை நமது முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். ஆனால், தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள்  போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. ஆனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு களில் கால தாமதம் ஏற்படுகிறது. போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்தல் காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அலையில் சிக்கிய மீனவரை தேடும் பணிகள் தீவிரம்

சிதம்பரம், ஜன. 12- சிதம்பரம் அருகே சி.மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்  சுரேந்திரன்(28). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களுடன் முடசல் ஓடை  பகுதியில் மீன் பிடிக்க விசைப் படகில் கடலுக்கு சென்றனர். மீன் பிடித்து விட்டு வெள்ளிக்கிழமை(ஜன.12) அதிகாலை  5 மணிக்கு கடைக்குத் திரும்பிய போது, எதிர்பாராத வகையில் கடல் அலையில் சிக்கிய விசைப்படகு சாய்ந்துள்ளது.  இதில் சுரேந்திரனை தவிர 3 பேர் தப்பித்து காயங்களுடன் திரும்பியுள்ளனர்.சுரேந்திரன் மட்டும் காணவில்லை. இதுகுறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடலோர காவல் படையினரின் உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுவை பொங்கல் பரிசு: கூடுதலாக ரூ.250 

புதுச்சேரி,ஜன.12- புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுக்கு ரூ.500 வங்கி கணக்கில் செலுத்திய நிலையில், கூடுதலாக ரூ.250 தருவதற்காக முதல்வர் ரங்கசாமி தந்த கோப்புக்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், புதுவை அரசுகள் பொங்கல் பொருட்களும், பரிசுத் தொகை யும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.500 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கடந்த காலத்தில் பொங்கல் பொருட்களுக்கான ரொக்கத் தொகையுடன் இலவச அரிசிக்கான 3 அல்லது 4 மாத  தொகையும் சேர்த்து வழங்கப்படும். ஆனால் சிவப்பு  அட்டைதாரர்களுக்கு சுமார் ரூ.3 ஆயிரம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,500 கிடைத்தது. தற்போது பொங்கல் பொருட்களுக்கு ரூ.500 மட்டுமே கிடைத்துள்ளது. இலவச அரிசிக்கான பணம் பற்றிய அறிவிப்பு இல்லை. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு ரூ.1000 பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, புதுவை முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசு கூடுதலாக ரூ.250 வழங்கும் கோப்பினை தலைமைச் செயலாளருக்கு அனுப்பினார். நிதியில்லை என்பதால் தலைமைச் செயலாளர் இந்தக் கோப்பை திருப்பி அனுப்பினார். இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி (ஜன.12)துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்கு வந்தார். அப்போது விழா மேடையிலேயே அமைச்சர்கள், கலைஞர்கள் முன்னிலையில் ஆளுநரிடம் கூடுதலாக ரூ.250 பொங்கல் பரிசு வழங்கும் கோப்பில் கையெழுத்து பெற்றார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் தரப்பில் கூறுகையில்,“பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக ரூ.250 சேர்த்து தர குடிமைப்பொருள் வழங்கல்  துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதன் மூலம் புதுச்சேரியிலுள்ள 3 லட்சத்து 38 ஆயிரத்து 761 அட்டைதாரர்கள் பயன்பெறுவர். மொத்தம் ரூ. 8.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.