districts

சென்னை முக்கிய செய்திகள்

கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் மீது குற்றப்பத்திரிகை

பூந்தமல்லி, ஜன.24- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு  வழக்கில் மேலும் 2 பேர் மீது பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன்  கோயில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் காரில் இருநத எரிவாயு  சிலிண்டர்  வெடித்து ஜமேஷா முபின் (28)  என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை  தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)   விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் இதுவரை இறந்தவருடன் 15 பேரை வழக்கில் சேர்த்துள்ள நிலையில், 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில்இந்த வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது அசாருதீன், முகமது இர்தியாஸ் ஆகிய 2 பேர் மீதும் என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர் பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மின்சாரத்தில்  இயங்கும் பைக் உற்பத்தி நிறுவனம் விரிவாக்கம்

சென்னை,  ஜன.24- மின்சாரத்தில் இயங்கும் பைக் உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிஎன்சி மோட்டார்ஸ் நாடு தழுவிய விரிவாக்த் திட்டத்தை அறிவித்துள்ளது.  300 டீலர்ஷிப் நெட்வொர்க்குகளை அதன் தற்போதைய  10  விற்பனையகங்களை சேர்க்கும் அதன் திட்டங்களை அறிவித்தது.   இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள பிஎன்சி, இந்தியாவின் வடக்குப் பகுதியில், முக்கியமாக டெல்லி - என்சிஆர், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும்  ஹரியானா போன்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட 90 புதிய விற்பனை நிலையங்களைத் திறக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.   இந்த விரிவாக்கத்திட்டத்தால்  1500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி  அனிருத் ரவி கூறினார். இந்த நிறுவனம் 2023-ஆம் ஆண்டில் சேலஞ்சர் எஸ் 110 பைக் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது

சென்னை, ஜன. 24- சென்னை அடையாறில் கல்லூரி மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக ஊடகத்தில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆழ்வார் திருநகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (22). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் மின்னஞ்சல் முகவரி, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை ஹேக் செய்து,  அதில் இருந்த அவரது புகைப்படங்களை திருடியுள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து,  சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். முக்கியமாக அந்த மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள், நணபர்கள் ஆகியோருக்கு அனுப்பி அவமானப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சிடைந்த மாணவி, இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் தென் மண்டல சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தமீம் அன்சாரியை புதன்கிழமை கைது செய்தனர்.

100 நாள் வேலையில்  கல்வி கையேடு விநியோகம்

கிருஷ்ணகிரி, ஜன. 24- போச்சம்பள்ளி வட்ட கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்  திட்ட பணியாளர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி பணியாளர்கள்  கையேடு வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் பரமசிவம், மக்கள் நலப்பணியாளர் ராஜா, பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழா: பேருந்து நிலையங்களில் சோதனை

விழுப்புரம், ஜன.24- குடியரசு தின விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும்  ரயில், பேருந்து நிலையங்களில் வெடி குண்டு சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஜன.26 அன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாக காவலர் அணிவகுப்பு மைதானத்தில் ஆட்சியர் பழனி தேசியக்கொடி ஏற்றி வைத்து  காவல்துறை, தீயணைப்பு, ஊர்காவல் படை உள்ளிட்ட வர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் அவர், பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட  உதவிகள் வழங்க உள்ளார். இதனிடையே குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து,  ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமை களை மோப்பநாய் ராணி மூலம் சோதனை செய்யப்பட்டது. தென்மாவட்டங்களுக்கு சென்ற ரயில்களில் சோதனை நடத்தப்பட்டன. பயணிகள் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மக்கள் கூடும்  இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.  தங்கும் விடுதிகளில் சோதனை நடத்திய போலீசார் சந்தேக நபர்கள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். மேலும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனையும் நடத்தப்பட்டது.