கடலூர், ஏப்.21- சென்னை செல்வதற்கு போதிய பேருந்து இல்லாததால் கடலூர் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமானோர் வந்து வாக்களித்தனர். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை செல்வதற்கு கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், திண்டிவனம் பைபாஸ் வழியாகவும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.