சென்னை, அக். 6 - பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளை பாதிக்காத வகையில், வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகர சிறு வியாபாரிகள் சங்கத்தின் 43வது ஆண்டு பொது மாநாடு வியாழனன்று (அக்.5) மண்ணடியில் நடைபெற்றது. துறைமுகம் தொகுதியில் உள்ள தெருவோர குடிசை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அங்கீகரிக்கப் பட்ட கடைகளை பாதுகாக்க வேண்டும், ரட்டன் பஜாரில் காலியாக உள்ள இடத்தை கடைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு அன்வர் சாதிக் தலைமை தாங்கினார். எஸ்.சித்திக் வரவேற்க, கே.பால கிருஷ்ணன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். பொதுச் செயலாளர் எம்.அபுதாகீர் வேலை அறிக்கையும், எஸ்.சித்திக் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநிலத் தலைவர்அ.சவுந்தர ராசன், வழக்கறிஞர் டி.நாகசைலா, ஊடகவியலாளர் ஹாசிப், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, துறைமுகம் பகுதிச் செயலாளர் எம்.ஜலாலுதீன், சுமைப்பணி சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.அருள் குமார் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் தலைவராக அன்வர் சாதிக், பொதுச் செயலாளராக எம்.அபுதாகீர், பொருளாளராக எஸ்.சித்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.