திருவண்ணாமலை,டிச.6- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் ராதாபுரம் ஊராட்சியில், வசிக்க வீடின்றி தவிக்கும் ஆதியன் பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஏரிக் கரையின் ஓரத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்று சொல்லக்கூடிய, ஆதியன் பழங்குடி இன மக்கள் சுமார் 14 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் குடிசை என்பது தார்ப்பாயை மேற்கூரையாகவும்,பக்கசுவர்களாகவும் அமைத்துள்ளனர். அனைவரும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உட்பட அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளனர். சட்ட மன்ற தேர்தல்,ஊராட்சி மன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் தங்களது வாக்குரிமையை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது திரு வண்ணாமலை மாவட்டத்தில் பெய்துள்ள கன மழையில் அவர்கள் வசிப்பிடத்தை சுற்றி மழைநீர் குட்டை போல் தேங்கி யுள்ளது. மழை வெள்ளத்தில் வந்த கழிவு களால் துர்நாற்றம் எடுத்து, நோய் பரவக் கூடிய சூழல் உள்ளது. தற்காலிகமாக அங்கு வசித்த பழங்குடியின மக்கள் ராதா புரம் சமுதாயக் கூடத்தில் தங்கியுள்ளனர். எனவே இவர்களுக்கு உடனடி வீட்டு மனைப்பட்டா வழங்க கேட்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் அண்ணா மலை, தண்டராம்பட்டு வட்டாட்சியரை சந்தித்து பேசியதன் அடிப்படையில் இடத்தை பார்வையிட்ட கூடிய விரைவில் அவர்களுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள இடத்திற்கு பட்டா வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார்.