மீனம்பாக்கம், ஜூலை 12- உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, “ஏர்பஸ் பெலுகா” முதல்முறையாக செவ்வாயன்று சென்னைக்கு வந்தது. குஜராத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி சென்றது. நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு, ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் பிரான்சில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றி செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் “பெலுகா” என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995ம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இது, ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது.