கள்ளக்குறிச்சி, ஜூன் 2- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைறின் கட்டுப்பாட்டிலுள்ள 27 பள்ளி மாணவர் விடுதி, 1 தொழில் பயிற்சி மாணவர் விடுதி, 11 பள்ளி மாணவியர் விடுதி, 1 ஆதிதிராவிட நல கல்லூரி மாணவியர் விடுதி உட்பட 40 விடுதிகளில் 2023-24ஆம் ஆண்டு கல்வியாண்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி விடுதிகளில் தங்கி பயில விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உணவு, உறைவிடம், 4 இணை சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்க ளது ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் .6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு இடைவெளி 5 கி.மீ. மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்கு பொருந்தாது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் சேர விடுதி மேலாண்மை செயலியின் மூலம் (https;//thadw,hms.in என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது விடுதி காப்பாளர்கள் உதவியுடனோ வரும் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.