districts

ஆந்திர காவல்துறைக்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி,ஜூன் 27-

      மத்தூர் புலியாண்டபட்டி குறவர் மக்களை சட்ட விரோதமாக கைது செய்தும் பெண்களை பாலியல் வன்புணர்வு, கொடூர சித்திரவதைகள் செய்த ஆந்திர மாநில காவல்துறை மீது தமிழ்நாடு அரசு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ்மக்கள் சங்கம் இணைந்து கிருஷ்ணகிரியில்  செவ்வாயன்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடத்தின.

    ஆந்திர மாநில காவல்துறையினர்  தமிழகத்தை சேர்ந்த குறவர் மக்களை கைதுசெய்ய உடந்தையாக இருந்த  காவல்துறை டிஎஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்க இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  

    ஆந்திர காவல்துறையினரால் கடுமையான பாதிப்புக்குள்ளான குறவர் மக்களுக்கு தலா ரூ25 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், ஆந்திர காவல்துறையினர் மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்து ஊத்தங்கரை டிஎஸ்பி மீது துறைவாரி நடவடிக்கை எடுக்கவேண்டும், எஸ்சி எஸ்டி ஆணையத்தை பயனுள்ளதாக மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர்  பெ.சண்முகம், பேசுகையில்  மேலும் ஆந்திர காவல்துறையினர் இங்கு வந்து குறவர் பழங்குடி மக்களை பல நேரங்களில் கைது செய்து அழைத்துச் சென்று சித்திரவதைக்கு,பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். ஆந்திர காவல்துறையி னரால் நடத்தப்பட்ட இந்த கொடூர சம்பவத்திற்கு ஊத்தங்கரை டிஎஸ்பி உடந்தையாக இருந்துள்ளார்.    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.      

            தமிழ்நாடு அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட காவல் துறை இடமும் அனுமதி பெறாமல் இங்கு வந்து ஆந்திர காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்வது என்பது சிறிதும் ஏற்க முடியாது.  எனவே பாதிக்கப்பட்ட குறவர் மக்கள் ஒவ்வொருவருக்கும்  நிவாரணமாக 25 லட்சம் வீதம் உடனடியாக வழங்க வேண்டும்,தமிழக அரசு ஆந்திர காவல்துறையின் மீது 376/2 தவிர வேறு எந்த பிரிவுகளிலும் வழக்கு போடவில்லை. ஆகவே முதல்தகவல்அறிக்கையை  மாற்றி எஸ்சி,எஸ்டி மக்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொடூர சித்திரவதைகள்,சட்டத்திற்கு புறம்பாக தமிழக எல்லைக்குள் புகுந்து கைது செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட வேண்டும் எனவும் சண்முகம் கோரிக்கை விடுத்தார்.  

    தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம்,தமிழ்நாடு பழங்குடி குறவன் சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜ், தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், மகாலிங்கம்,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்  ஆகியோர் பேசினர். சிபிஎம் போச்சம்பள்ளி வட்ட செயலாளர் சாமு நன்றி கூறினார்.

    எஸ்சி, எஸ்டி ஆணையம் என்பது பெயரளவுக்கு உள்ளது.ஆணையக் குழுவில் எஸ்சி.எஸ்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் உறுப்பினராக  இல்லாத பயன்படாத நிலை உள்ளது. இத்துறையின் அமைச்சர் இந்த ஆணையத்திற்கு சம்பந்தமில்லாதவராக உள்ளார். இப்படியான ஒரு ஆணையம் எந்த பயனையும் அளிக்காது.      ஆணையத்தை மாற்றியமைக்க வேண்டும், இந்த ஆணையத்தில் பட்டியல் இனத்தவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

     தமிழ்நாடு முதல்வர் இது குறித்து சரியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எஸ்சி,எஸ்டி ஆணையம் பயனுள்ளதாக  இருக்கும். முதல்வர் உடனடியாக ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.