சென்னை, ஏப். 23- சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 60ஆவது பிளாக்கை சேர்ந்தவர் நவீன்குமார் (எ) வாழைப்பழ அப்பு (27). தொழில்முறை ரவுடியான இவர் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்கு கள் உள்ளன. வியாசர்பாடி ரயில்வே பணிமனை அருகே உள்ள முட்புதரில் செவ்வாயன்று தலையில் பலத்த காயங்களுடன் நவீன்குமார் கிடந்தார். அவரது கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்கேபி. நகர் காவல் துறையினர் நவீன்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொல்லப்பட்ட ரவுடி நவீன்குமார் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதால் யாரேனும் அவரை திட்டமிட்டு கொலை செய்தார்களா அல்லது நண்பர்களுக்குள் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்க ளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.