ஆட்டோவில் மாற்றுத்திறனாளி தவறவிட்ட நகை மாயம்
சென்னை, செப். 6- ஆட்டோவில் மாற்றுத்திறனாளி தவற விட்ட நகையை எடுத்துக்கொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மதுரவாயல் ஜானகி நகரைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (41). இவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாணி (40). இவர்கள் இருவரும் கண் பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் தி.நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் மாதம் மாதம் பணம் கட்டி நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர். சேமிப்பு கணக்கு முடிந்த தால் கணவன்,மனைவி இருவரும் உறவினர் ஒருவருடன் நகைக் கடைக்கு சென்று 5 சவரன் நகையை வாங்கினர். பின்னர் தி.நகரிலிருந்து மாநகர் பேருந்து மூலம் மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றனர். அப்போது நகை, செல்போன் வைத்திருந்த பையை ஆட்டோவில் தவறவிட்டது தெரிய வந்தது. உடனே தவறவிட்ட செல்போனுக்கு போன் செய்த போது போன் அணைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீனதயாளன் என்பவர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த ஆட்டோவை பிராட்வேயில் மடக்கி பிடித்தனர். பின்னர் மதுரவாயல் காவல் நிலையம் அழைத்து வந்து தீனதயாளனிடம் விசாரித்த போது, நகையை எடுத்து வைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 5 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
செப்.9 குடிநீர் வாரியம் குறை தீர்க்கும் கூட்டம்
சென்னை,செப்.6- சென்னை குடிநீர் வாரியம் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 9 ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதி யம் 1 மணி வரை நடக்கிறது. இக்கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள கட்டணங்கள், புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் தெரி விக்கலாம்.
50 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர்,செப்.6- சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரில் ரேசன் அரிசி கடத்தப் படுவதாக காவல்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்ட னர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
திருவள்ளூர்,செப்.6- பூண்டி ஏரிக்கரை அருகே காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்பவரின் 8 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து கொன்று விட்டு சென்று விட்டது. புதனன்று ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு ரஜினி அதிர்ச்சி அடைந்தார். இறந்த ஆடுகள் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது. எனவே ஆடுகள் சிறுத்தைப்புலி அடித்து கொன்று விட்டு சென்றதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர். சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனினும் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகின்றனர். பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘லைட் மெட்ரோ’ திட்டம்
சென்னை,செப்.6- சென்னையின் பல்வேறு பகுதிகளில் ‘லைட் மெட்ரோ’அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகருக்கு புதிய போக்குவரத்து திட்டத்தில் அண்ணா நகர், தி.நகர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2.50 லட்சம் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது. சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதை இல்லாமல் சாதாரண மாக சாலையில் செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமைக்கப்படும். சாலையின் ஓரத்தில் அல்லது மையப்பகுதி யில் தண்டவாளம் அமைத்து மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமையும். மெட்ரோ திட்டங்களோடு ஒப்பிடுகையில் மூலதன செலவு குறைவாகும். பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி என 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் மதராஸ் மாகாணத்தில் இயக்கப்பட்ட ட்ராம் வண்டிகளின் நவீன வடிவமே லைட் மெட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
கூவத்தில் மூழ்கி 2 பேர் பலி
சென்னை,செப்.6- சிந்தாதிரிப்பேட்டை கூவத்தில் மூழ்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். புதனன்று (செப்.6) அவரது உடலை மீட்டு கொண்டிருந்தபோது இன்னொரு வாலிபர் குதித்து விட்டார். அவரும் கூவத்தில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருவரும் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். எழும்பூர் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த இருவரில் ஒருவர் செவ்வாயன்று கூவத்தில் குதித்த நிலையில் இன்னொருவரும் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் மோதி வாலிபர் பலி
தாம்பரம்,செப்.6- ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுரை முர்மு (24). இவர் பள்ளிகரணையில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் செவ்வாயன்று இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சுரை முர்மு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஏரி, குளங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்
திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு
திருவள்ளூர்,செப்.6- விநாயகர் சிலைகளை திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஏரி, குளங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:- களிமண்ணால் செய்யப்பட்டது மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலீஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப் பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்ற பயன்படுத்தப்படலாம். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்க ளால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர் ஏரி (புட்லூர் ஏரி), கூவம் (ஈசா ஏரி) மப்பேடு, திருமழிசை, வெள்ள வேடு, ஊத்து கோடை குளம், சித்தேரி, ஊத்துக் கோட்டை, கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை, காந்தி ரோடு குளம், திருத்தணி, வண்ணான் குளம், ஆர்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூர்பேட்டை, பராசக்தி நகர் குளம், திருத்தணி, கனகம்மாசத்திரம், குளம் புலிகாட் ஏரி, திருப்பாலைவனம், ஏழு கண் பாலம், கும்மிடிப்பூண்டி, பக்கிங்காம் கால்வாய், காக்களூர் ஏரி, திருவள்ளூர் ஆகிய ஏரி, குளங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்ணுக்கு நுண்துளை தண்டுவட சிகிச்சை
கிருஷ்ணகிரி,செப்.6- கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் சிறப்பு சிகிச்சை பிரிவின் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, குழந்தைகள் குறைபாடு அறுவை சிகிச்சை, விளையாட்டுக் காயங்களுக்கான நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்டுவட சிறப்பு பிரிவில் இடுப்பு, கை, கால் வலிகளுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில், ஜப்பான் நாட்டின் சர்வதேச நிறுவனத்தின் உதவியுடன் இந்த சிறப்பு அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஓசூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கு இடுப்பு வலிக்கு, நுண்துளை தண்டுவட சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உடனடியாக வீடு திரும்பினார். மருத்துவர்கள் தனசேகரன் தலைமையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துறைத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த சிகிச்சையை ஒருங்கிணைத்தனர். இந்த நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம், தீராத இடுப்பு வலி, கை, கால் வலிகளுக்கு தழும்பு மற்றும் வலி, முழு மயக்கம் இல்லாமல் வெறும் மரத்துப் போகும் மருந்து செலுத்தி, ரத்த சேதாரம் இல்லாமல் ஒரு நாளிலேயே வீட்டிற்குச் செல்லும் தன்மையுடன் கூடிய ‘டே கேர்’ அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிகிச்சை பெற்றவர்கள், பளு தூக்குவது முதல் அன்றாட தொழில் நடைமுறையில் எந்த சிரமமும் இல்லாமல் வாழ முடியும். எனவே இந்த வாய்ப்பின் மூலம் மூட்டு, இடுப்பு வலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலை கரைப்பு: ஆட்சியர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி,செப்.6- சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் தான் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பொதுமக்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவர்கள் கைது
விழுப்புரம்,செப்.6- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 5 வயது சிறுமி அங்கன்வாடிக்கு சென்று வீடு திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 10 ஆம் வகுப்பு, 7 ஆம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீர் லாரி மோதி விபத்து: காவலர்கள் காயம்
சென்னை, செப். 6- புழல் சிறையிலிருந்து காவல்துறை வாகனத்தில் 14 கைதிகளை ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். சரவணகுமார் வாகனத்தின் ஓட்டுநராக இருந்தார். அப்போது ஸ்டான்லி மருத்துவமனை நுழைவாயில் உள்ளே இருந்து வெளியே வந்த தண்ணீர் லாரி காவல் துறை வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ரஞ்சனி, சபிதா ஆனந்தி, கார்த்திக் பிரியா, சாஜிதா ஆகிய 4 பெண் காவலர்களும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சென்னையில் காவலர்களுக்கு குத்துச்சண்டை மைதானம் திறப்பு
சென்னை,செப்.6- காவல்துறையினரின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் வகைஉஎ யில், சென்னை எழும்பூரில் உள்ள புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உப கரணங்கள் வைப்பறையை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். மேலும், தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக் கான உபகரணங்களையும் அவர் வழங்கினார். மேலும், இந்த திட்டத்திற்கான செலவு அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில்,சென்னை காவல் இணை ஆணையர் கயல்விழி,துணை ஆணை யர் ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை) உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.