districts

img

மூதாட்டி தவற விட்ட பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னை, ஏப்.24 - மூதாட்டி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாயை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (வயது 67). இவர், சேக் மேஸ்திரி பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது கையில் எடுத்துச் சென்ற ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரிய வந்தது. இது குறித்து ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் (35), தனது ஆட்டோவில் பயணித்த மூதாட்டி ஒருவர் ரூ.80 ஆயிரம் பணப்பையை தவற விட்டுவிட்டதை திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டது என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மும்தாஜை வரவழைத்து  பணத்தை காவல்துறையினர் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வெகுமதி வழங்கினர்.