கள்ளக்குறிச்சி பிப்.9- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 477 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கினார். அதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் ஷ்ரவன் குமார் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கினார். அப்போது பேசிய ஆட்சியர், “ 477 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.35.35 கோடி நேரடி கடனாகவும், 36 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ. 34.67 கோடி வங்கிப் பெருங்கனாகவும் மொத்தம் 513 சுய உதவி குழுக்களுக்கு ரூ.71 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது” என்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், உதவி திட்ட அலுவலர்கள் ஆண்டாள் ராஜா, சம்பத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.