விழுப்புரம், ஜூலை 30-
விழுப்புரம் வழியாக லாரியில் கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி புவியியலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை 4 முனை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு டாரஸ் லாரியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர். அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு அதன் ஓட்டுநர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதில் 16 டன் எடையுள்ள 6 கருப்பு கிரானைட் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இவற்றை நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து கிரானைட் கற்களுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து பாலசுப்பிரமணியன், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இந்த கிரானைட் கற்களை கடத்திச் செல்ல முயன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்