வண்டலூர்,ஜூலை 31-
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவர் அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் தந்தை கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனை பெண் ஆய்வாளர் மகிதா அன்ன கிருஷ்டி வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அந்த சிறுமிக்கு ஏற்கெனவே கருக் கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார் தனது மகளுக்கு சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் கருக்கலைப்பு செய்ததாக ஆய்வாளரிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் மருத்துவ மனை நடத்தி வரும் அரசு மருத்துவர் பரா சக்தி மற்றும் மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். பின்னர் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி மருத்துவர்களிடம் ரூ.12 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்ஆணையர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பெண் ஆய்வாளர் பணம் வாங்கியது உறுதி யானதால் கடந்த 11-ந்தேதி மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் பராசக்தி, மறைமலைநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்தார். இதையடுத்து மறைமலைநகர் காவல்நிலையத்தில் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ஞாயிறன்று பொன்னேரி அருகே மகிதா அன்ன கிருஷ்டியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.